முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இரு இடதுசாரி கட்சிகளிடமும் சில கேள்விகள்

தவெகவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - பெ.சண்முகம் பதில், Will support for  TVK continue for five years? – P. Shanmugam responds

1) தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்துக்கும், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கும் எதிராகப் போராட்டம் பண்ணுகிறீர்கள். அரசு உங்களைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. அதே நேரம், நீங்கள் ஆதரவைத் திரும்ப பெறுவோம், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் எனச் சொன்னால் இறங்கி வருவார்கள். அதைச் செய்யாமல் நீங்கள் ஏன் பம்முகிறீர்கள்?

2) அரசின் முடிவில் தலையிடக் கூடாது, ஆனால் அறிவுறுத்துவோம், விமர்சிப்போம், போராடுவோம் என்றால் என்ன மாதிரி ஆதரவு நடவடிக்கை இது?
3) உங்கள் நோக்கம் பெயருக்குப் போராடுவதா அல்லது அரசின் மீது அழுத்தம் போட்டு மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதா? பின்னது எனில் உங்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டை நீங்கள் ஏன் எடுப்பதில்லை?
4) பாஜகவின் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் தவெக அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்காரர் ஒருவரே சட்டத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவை விமர்சித்து ஒரு சொல்லைச் சொல்லக் கூட தவெகவினர் தம் கூட்டணிக் கட்சி அமைச்சரை அனுமதிப்பதில்லை. சபாநாயகர் உடனே நேரடியாகத் தடை போடுகிறார். அமித் ஷா வந்ததும் விஜய் ஓடிப் போய் பணிகிறார். பாஜகவின் திட்டங்களை இங்கே ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். நேரடியாக கிறிஸ்துவ போதனையை, மதநூல்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதன் வழியாக மதவாதத்தை தவெகவினர் இயல்பாக்கப் பார்க்கிறார்கள். இதை பாஜக பேச்சாளர்கள் யுடியூபில் ஆதரித்து ஏன் இந்து மதக் குறியீடுகளை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மதத் தலைவர்களாக அமைச்சர்களை முன்வைக்கிற பாஜகவின் அரசியலுக்கு தவெக அடியெடுத்துக் கொடுக்கிறது. நாங்கள் பாஜகவுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்க விரும்பவில்லை எனக் கூறுகிறார் முதல்வர் விஜய். நீங்கள் பாஜகவைத் தடுக்க தவெகவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னால் நேரெதிராக தவெக பாஜகவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து அவர்களுடைய மதவாதக் கலாசாரத்தைப் பரப்பும் வேலையைப் பார்க்கிறார்கள். அதாவது நீங்கள் சொன்னது ஒன்று, அங்கே நடப்பதோ மற்றொன்று - நீங்கள் வெளியில் இருந்து ஒரு பாஜக பிராக்ஸி அரசை இங்கே ஆதரிக்கிறீர்கள்? உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன? பாஜகவைக் கொண்டு வருவதா, கொண்டு வருவோரைக் கொண்டு வருவதா?
5) உங்கள் நோக்கம் பாஜகவின் ஆளுநர் ஆட்சியைத் தடுப்பதா தவெக அரசை, அது என்ன செய்தாலும் கூட, ஒரு போலி பாஜகவாக, முதலீட்டிய கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சியாக இருந்தாலும் கூடக் காப்பாற்றுவதா?
6) "எங்களால் தவெக அரசுக்கு எந்த பாதிப்பும் வராது" என்கிறீர்கள். இந்த அரசின் மீது உங்களுக்கு எந்த மாறுபாடும் இல்லை, இது ஒரு சிறந்த அரசு என நீங்கள் நினைத்தால் ஏன் தனித்துப் போட்டியிட வேண்டும்? ஆகையால் இடைத்தேர்தலில் நீங்கள் தனித்துப் போட்டியிடுவதே தவெகவுக்காக எதிர்க்கட்சியினர் வாக்குகளைப் பிரிப்பதற்குத்தானோ எனும் ஐயம் எழுகிறது. உங்கள் உண்மையான நோக்கம்தான் என்ன?
7) இதுவரைக்கும் நீங்கள் இந்த அரசை விமர்சிக்கிறீர்கள் எனினும் உங்கள் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தாமல் வலிக்காமல் அதைச் செய்கிறீர்கள். அமைச்சர் ராஜ்மோகனும் "தோழர்கள் மூத்தவர்கள், அவர்கள் விமர்சனத்தைக் கேட்டுக் கொள்கிறோம்" என்கிறார். அதற்கு அவர்கள் வயதானவர்கள், ஒரு பக்கமாக இருந்து பேசட்டும், நாங்கள் இன்னொரு பக்கம் எங்கள் வேலையைப் பார்க்கிறோம், அவர்கள் சொல்வதைக் கேட்போம், ஆனால் பொருட்படுத்த மாட்டோம் எனப் பொருள். உங்களுக்கு இதைக் கேட்க அவமானமாக இல்லையா? ஒரு இடதுசாரி ஆதரவாளராக எனக்கு அவமானமாக இருக்கிறது!
😎 ஒரு ஆளுங்கட்சியை வெளியில் இருந்து ஆதரிக்கும் நீங்கள், ஆதரவைத் திரும்பப் பெற்று அதைக் கவிழ்க்கும் பலம் கொண்ட நீங்கள் ஏன் பலமற்ற ஒரு எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறீர்கள்? இரட்டை நிலைப்பாட்டிலேயே இருந்தால் மக்கள் உங்கள் எப்படி நம்புவார்கள்?
9) ஆட்சி கவிழ்ந்து விடக் கூடாது, அதனாலே பொறுமை காக்கிறோம் எனக் கூறுகிறீர்கள். நிஜத்தில் அது ஒருபோதும் நடக்காது என உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் பாஜகவின் மறைமுக ஆதரவுடன் தவெக அதிமுக எம்.எல்.ஏக்களைத் தம் பக்கம் ஆதரவு தர வைத்து ஆட்சியைக் காப்பாற்றுவார்கள். தவெக மீது பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்த முதலிட்டு சக்திகள் அது கவிழ்வதை விரும்ப மாட்டார்கள் (சிறுபான்மை என்.ஜி.ஓக்கள் வழியாகக் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணம் கூட இதில் உள்ளதாக ஒரு வதந்தி உள்ளது.) பாஜகவும் தமக்கு இணக்கமான இந்த ஆட்சியை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டார்கள். ஆக நீங்கள் எதற்காக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறீர்கள்?
10) அதிமுக எம்.எல்.ஏக்களைக் கட்சித் தாவல் பண்ண வைத்து கட்சிக்கு ஆதரவு நாடினால் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக நீங்கள் எச்சரிக்கிறீர்கள். ஏன் மக்கள் பிரச்சினைகளுக்காக இதே மிரட்டலை நீங்கள் விடுப்பதில்லை? உங்கள் அக்கறை மக்களைக் காப்பாற்றுவதிலா அல்லது வெகவுக்கு ஆதரவு கொடுக்கும் உங்கள் 'ஆற்றலைக்' காப்பாற்றுவதிலா?
11) இடைத்தேர்தலில் தவெக வெல்லக் கூடாது, மெஜாரிட்டியை நெருங்கக் கூடாது என நீங்கள் நினைத்துப் போட்டியிடுவது மக்களுக்காகவா அல்லது உங்களது இந்த பேரம் பேசும் துருப்புச் சீட்டைக் காப்பாற்றவா? அல்லது வாக்குகளைப் பிரிக்கவா?
12) தவெகவுக்கு நீங்கள் அளித்துள்ள ஆதரவானது நீங்கள் பெற்றுள்ள சொற்ப இடங்கள் மற்றுமல்ல, அது தார்மீக ஆதரவும்தான். நீங்கள் இக்கட்சியை ஆதரித்துக் கொண்டே எதிர்த்துப் போராடும்போது மக்களுக்கு 'இந்த அரசு ஒன்றும் மோசமில்லை, தார்மீக நிலைப்பாட்டில் இருந்து வழுவதில்லை, ஏனெனில் இடதுசாரிகளே உடனிருக்கிறார்களே' எனும் பிரமையை ஏற்படுத்துகிறது. தார்மீக விரோதமான ஒரு கட்சிக்கு இப்படி ஒரு போலி அங்கீகாரத்தை நீங்கள் வழங்குவது உங்கள் கொள்கைக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...