
ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.
இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல் துறையால் நசுக்கினார். பஞ்ச தந்திரக் கதையொன்றில் தன் நண்பனான முதலை மீது அமர்ந்து டின்னருக்குப் போன குரங்கின் நிலைதான் மக்களின் நிலை இப்போது.
பாடம்: ஒரு புதிய கட்சி களத்துக்கு வந்து மலிவு விலைக்கு பக்கெட், பீரோ விற்கிறோம், பத்தாயிரம் தந்தால் அதை மூன்று மாதங்களில் ஒரு லட்சம் ஆக்கித் தருகிறோம் எனும் கணக்கில் பிரச்சாரம் பண்ணினால் அவர்களுக்குப் பின்னுள்ள நிதியாளர்கள், நிறுவனங்கள் யார் என விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தின் நதி மூலத்தைத் தெரிந்து கொள்ளாமல் உடனே ஆதரவு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அளிக்கும் வாக்கு அக்கட்சிக்கு அல்ல, அந்நிறுவனங்களுக்கே. அவர்கள்தாம் அக்கட்சியை முகமாக வைத்து ஆட்சியை நடத்தப் போகிறார்கள். மின்சாரக் கட்டண உயர்வு, தனியார் பார்கள், குட்டிக் குட்டி கல்லூரிகளை தனியார் பல்கலைகள் ஆக்குகிறோம் எனும் பெயரில் கட்டணக் கொள்ளை அடிப்பது எல்லாமே தவெக அரசு செய்கிற காரியங்கள் அல்ல, இம்முதலாளிகள் செய்வதே.
முதலையுடன் கைகுலுக்கி நட்பாகும் முன்பு அதன் மனைவி யார், அவர் நம் இதயத்தைக் கேட்பாரா என்று யோசிக்க வேண்டும்.
கருத்துகள்