முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்னஞ்சிறு வானவில் - ஆர். அபிலாஷ்



 மரக்கொப்புகள் வரிசை வரிசையாக

இடுங்கின பாதையில் இரு மருங்கும்
சத்தமே எழாமல்
விழுவதே தெரியாமல்
போர்க்காட்சிகளைத் துல்லியமாக வர்ணங்கள் தழுவிட
காட்டும் டிவி கடை எல்.இ.டி திரையில்
இடைவிடாமல் பொழிகிற குண்டுகளை,
எய்யப்படுகிற ஏவுகணை போல
மழை என்னை அச்சுறுத்துகிறது
நான் இரு பக்கமும் பார்த்துக் கொண்டே
அவசரமாக நடக்கிறேன்
என் புறங்கையில் ஈரம் படிகிறது
ஒரு குழந்தை ஒப்புவிக்கும் எழுத்துக்களைப் போல
என் சப்பாத்துகளைத் தொட்டுத்தொட்டு
துளிகளின் வரிசை
சப்தங்கள் திரும்பிப் பார்க்கையில்
மறைகின்றன
என் சிறுவயது மழைகள் நினைவுக்கு வருகின்றன
சரளைக் கற்களை வாரி அடித்ததைப் போன்ற மழை
கண்ணாடிச் சில்லுகள் காற்றின் குறுக்கே பறப்பதைப் போன்ற மழை
இடிமுழக்கமும் குளத்துக்குள் யாரோ தொபுக்கெனக் குதிப்பதான ஒலிகளும் நிரம்பிய அடைமழை
வானின் கதவைப் படாரெனச் சாத்தியதைப் போன்ற மழை
நினைவுகளைத் துலக்கமாகக் கழுவி திகைத்து நிற்க வைக்கும் மழை
தேம்பலை, கண்ணீர்க் கசிவைக் கேட்டபடி பேசிக்கொண்டே போகும் மழை
போகிற போக்கில் ஜன்னல்களுக்குள் அள்ளித் தெளித்துப் போகும்
கதவின் விளிம்பின் வழி விரல்கள் நுழைத்து எட்டிப் பார்க்கும் மழை
வீடு முழுக்க வீச்சம் அடிக்கும் மழை
மனம் முழுக்க சொற்களைக் கவிழ்த்துக் கலைத்துப் பார்க்கிற மழை
எப்போதுமே ஒழுங்குகளைக் குலைக்கும் மழை
கொலைத் தடயங்களை முன்னுக்குப் பின்னாய் விட்டு
அலங்க மலங்க விழித்தபடிச் சரணடையும் குற்ற மழை
என் சிறுவயதில் மழையைக் குறித்த சித்திரம்
நான் அதை வேடிக்கைப் பார்த்து நிற்கையில்
சட்டென யாரோ பின்னிருந்து தொட்டதைப் போல
திடுக்கிட்டுத் திரும்புவதே.
ஏன் பார்த்தாய், ஏன் அதையே பார்த்தாய்?
ஏதோ ஒரு குரல் வினவ
நான் பதிலற்றுப் போய் அழுகிறேன்.
மரக்கொப்புகள் திரையிட்ட இடுங்கின பாதையின் முடிவில்
பட்டென வெளிச்சம் வந்து அடிக்கையில்
கூச்சம் தாளாமல்
கைகளால் மூடிக் கொள்கிறேன்
மென்மையாய் இளவெயிலை ஒரு கையால் தழுவிபடி
பொழிகிறது மென்மையான மழை
காதலியின் காதில் கிசுகிசுக்கப்படும் போன்ற மழை
ஊடுருவும் துகிலை அசைக்கும் காற்றைப் போன்ற மழை
நெடிதுயயர்ந்த நீளக்கண்ணாடிச் சுவர்கள் மினுங்கும்
அடுக்கு மாடிக் கட்டிடங்கள்
குண்டு குழிகளில் தேங்கிய நீல வண்ணத் துளிகள்
கடைகளின் ஜன்னல் கதவுகளின் வழியே
கசியும் இனிமையான சிரிப்பொலி
காற்றில் நிறைந்து மிதக்கும் உணவக எண்ணெய் வீச்சம்
கடை அலமாரி வரிசையில் அடுக்கப்பட்டு
கண்ணாடி வழியே மழையை வேடிக்கைப் பார்க்கும்
யாரும் வாங்காத பொருட்கள்
வழுக்கி நீரைப் பாய்ச்சும் கார்கள்
நேரந்தவறி ஒளிரும் சாலை விளக்குகள்
சாய்ந்து சாய்ந்து நிமிரும் கிளைகள்
தத்திப் பறந்து எழுந்து கிளைகளில் அமரும் சிறுபறவைகளைத்
திகைப்புடன் பார்க்கும் பள்ளிக் குழந்தை
சாலையில் நீல, சிவப்புக் குடைகளுடன்
நவநாகரிக தேகங்களின் ஒழுங்கற்ற அலைவுகள்
உடல்களின், நகரத்தின், நிழல்களின்
மென்மையான முணுமுணுப்புகள்
திறக்கும் கதவுகளுக்குள் அவசரமாய்
நுழையும் மழையின் காலடிகள்
எங்கெங்கும் கேட்கும் ஓசையற்ற அழைப்பொலிகள்
ஆகாயத்தை மறந்து
பார்வை மட்டத்தில் பெய்யும் மழை
மரக்கொப்புகள் திரையிட்ட இடுங்கின பாதையின் முடிவில்
திரும்பிப் பார்க்கிறேன்
இருளுக்குள் தனித்து தயங்கி நிற்கிறது
இளம் பிராயத்தின் சின்னச்சின்னக் குற்றங்களின், அவமானங்களின்
மழையில் தோன்றிய சின்னஞ்சிறு வானவில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...