முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்ன தலைவலியில் இயங்கும் உலகம்



இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்

எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
கவனிக்கிறேன்

சின்ன தலைவலியுடன் இருக்கும் போது
வழக்கத்துக்கு மேலாக
எதுவுமே நிகழ்வதில்லை
ஆனாலும் எனது
செயல்களுக்கு
சிறப்பாக ஒரு தகுதி கிடைத்தும் விடுகிறது

ஒவ்வொன்றையும்
கூர்மையாக கவனித்து
கச்சிதமாக துரிதமாக தயக்கமின்றி
செய்தவதற்காக
அப்போது நீங்கள் யாருமே
பாராட்டும் பாத்திரத்தில்
இருக்க வேண்டியதில்லை
எனக்காக சதா புன்னகைத்து கொள்கிறேன்

சின்ன தலைவலிக்கு
மருந்து உண்பது
ஒத்திசைவற்ற ஒரு பொய்யை
சொல்வது போன்றது
சின்ன தலைவலி
தரும் தன்னம்பிக்கையை
மருந்து ஒருபோதும் தராது

தொடர்ந்து வழங்கப்படும் தண்டனைகளை
எதிர்ப்பது
சின்ன தலைவலியின் போது
லாவகமாகிறது
தண்டனைகள் மயக்க ஊசியை போன்றவை என்றால்
சின்ன தலைவலி
நம்மை உறங்க விடுவதே இல்லை
தண்டிப்பவரின் மனதுக்கு
மிக அருகாமையில் இருப்பதால்
விழிப்பாக இருப்பது கூட
அவசியமற்றதாகிறது

போதையை விடவும்
கூர்மையை விடவும்
வாதசாமர்த்தியத்தை விடவும்
அன்பற்ற இறுக்கத்தை விடவும்
சின்ன தலைவலி
பாதுகாப்பானது
அதிகாரமிக்கவரின் குற்றங்களை போல்
பரிசுத்தமானது

சின்ன தலைவலியுடன்
தூங்க முயல்வதை விட
அல்லது விழித்து வேலை செய்வதை விட
பாசாங்கு
வேறேதும் இருக்க முடியாது
அப்போது நமக்கு
நண்பர்களோ
பகைவர்களோ இல்லை
அனைவரையும்
மௌனம் காக்க வைப்பது
மெல்ல பதற்றம் கொள்ள வைப்பது
முள்ளை விடுவிப்பது போல் அன்பை விடுவிப்பது
கத்தி முனைவில் நிறுத்தி வைப்பது
இயல்பான ஒன்றாகிறது

வலியும் இன்பமும் துய்ப்பதற்கான
காரியங்கள்
என்று நம்புகிறோம்
ஒன்றை மறப்பதும்
மற்றதை நீட்டிப்பதும்
இவ்வளவு மெத்தனமாய் நகரும் வாழ்வுக்கு
செய்யும் அநீதி

ஒரு சின்ன தலைவலி
மிகப் பெரிய வலியாகவோ
மிக சிறந்த இன்பமாகவோ
ஆகும் போது தான்
‘நாம் மிக கவனமாக வேண்டும்
அப்போது
அவர்களுக்கு
அது வந்து விட்டதென்று அர்த்தம்
பின்
சின்ன தலைவலியுடன்
இயங்கும் உலகை
அசூயையுடனும் அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள்

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான கருத்துக்களும் கவிதையும் அருமையாக வந்து இருக்கிறது. பாராட்டுக்கள்!
பனித்துளி சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
தலைவலி என்ற ஒற்றை உணர்வுக்குள் இத்தனை வார்த்தைக் குவியலா !???
சிறப்பு
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சித்ரா மற்றும் சங்கர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.