நவீன கவிதையில், இலக்கியத்தில் பெரியார் இல்லையா? பெரியாரியத்தின் தாக்கம் இல்லையா?
நேரடியாக பதில் சொல்வதென்றால் “இல்லை”. ஆனால் இதன் பொருள் அரசியல் சித்தாந்தங்களுக்கு - பெரியாரின் அராஜகவாதத்துக்கு - இலக்கியத்தில் இடமில்லை என்பதல்ல. ஏனென்றால் அம்பேத்கரியத்தின் தாக்கத்தை நாம் மராத்திய, கன்னட, தமிழ் தலித் இலக்கியப் படைப்புகளில் வலுவாகவே காண்கிறோம். அரசியல் பொருளாதார தத்துவமான மார்க்ஸிய தாக்கத்தை திராவிட, பெண்ணிய, இடதுசாரி புனைவிலக்கியத்தில் காண்கிறோம். மூன்று தலைமுறை பெண்ணியவாதிகளின் சிந்தனைத் தாக்கத்தை நாம் இந்தியா முழுமைக்கும் உள்ள பெண் படைப்பாளிகளிடம், நாற்பதுகள் முதல் ரெண்டாயிரத்தின் பிற்பகுதி வரையிலான தமிழ் பெண் படைப்பாளர்களின் பிரதிகளிலும் துலக்கமாக பார்க்கிறோம். சொல்லப்போனால், தலித்திய, பெண்ணிய படைப்புகளில் போல மிக வெளிப்படையான அரசியல்தன்மையை நாம் பிற படைப்புகளில் காண முடியாது. இன்னொரு பக்கம் சமூகவியல் அறிஞரான பூக்கோவின் வலுவான தாக்கத்தை தொண்ணூறுகளுக்குப் பிறகான தமிழ்க் கவிதையில் பார்க்க முடியும். கோணங்கியின் கதைகளில், நாவல்களில் இயற்கையியல் சிந்தனையின் தாக்கத்தை பின்நவீன எழுத்துமுறையுடன் இணைக்கும் போக்கைக் காண்கிறோம். தமிழ் நவீன இலக்கியமானது விக்கிரமாதித்யன், தேவதேவன், வண்ணதாசன், தேவதச்சன், சி.சு செல்லப்பா, க.நா.சு, தி.ஜா, சு.ரா போன்றோரால் மட்டுமானது அல்ல, அது பலதரப்பட்ட வண்ணங்களை, சிக்கல்களை, ஊடுபாவுகளைக் கொண்டது. ஆகையால் சிறந்த இலக்கியமானது அரசியலுக்கு, பொருளாதாரத்துக்கு, சமூகவியல் சிந்தனைக்கு அப்பாலான ஆன்மீக, சடங்குசார் மதங்களின் புலத்திலே அமைந்திருக்கும் என ஜெயமோகன் கூறுவதை நாம் ஏற்க முடியாது. இருந்தாலும் இவ்வளவு சித்தாந்தங்களின் தாக்கம் கொண்ட தமிழ் நவீன கவிதையில், புனைவுகளில் ஏன் பெரியார் இல்லை என்பது ஒரு முக்கியமான கேள்வியே.
இதற்கான பதில் பெரியாரின் தாக்கம் இலக்கியவாதிகளிடம் பொதுவாக இல்லை என்பதல்ல. மாறாக இதை இரண்டு விதங்களில் நாம் பார்க்க வேண்டும். ஒன்று வடிவ ரீதியாக, மற்றொன்று நமது வாழ்க்கை முறை விருப்பங்கள் (கிராமம் vs நகரம்) சார்ந்து.
ஒரு படைப்பாளி தான் யோசிப்பதை, உணர்வதை அப்படியே படைப்பாக்குவதில்லை. மாறாக தன்னை ஈர்க்கிற, தனக்கு உண்மையாகப் படுகிற ஒரு எழுத்து வடிவை, மொழிக்கட்டமைப்பை அவன் தேர்வு செய்கிறான். அதனுள் இருந்து சிந்திக்க, உணர்வெழுச்சி கொள்ள தன்னையே பயிற்றுவிக்கிறான். உ.தா., அத்வைத மெய்யியல் சார்ந்து மீபொருண்மை உலகை நோக்குகிற படைப்புகளை விரும்புவோர் பக்தி இலக்கியத்தில் துவங்கி தேவதேவன் போன்ற கவிஞர்களின் கவியுலகை வந்தடைவார்கள். அவர்களுக்கு எமிலி டிக்கின்ஸனும் பிடிக்கும். விவிலிய எழுத்தை இந்த அத்வைத மீபொருண்மை நோக்குடன் இணைத்து ஒரு பிரான்ஸிஸ் கிருபா உருவாகுவார். இதற்கு ஒரு தொடர்ச்சி இப்படி இருந்தபடி இருக்கும். இடதுசாரி புனைவுகள், தலித்திய சுயவரலாற்றெழுத்து, பெண்ணிய எழுத்து என ஒவ்வொன்றுக்கும் இப்படி ஒரு மொழி இருக்கும். அந்த மொழியே - வாழ்க்கை அல்ல - படைப்பாளிகளை ஈர்க்கிறது, தன்வயப்படுத்துகிறது.
பெரியாரின் அராஜகவாத அரசியல் சிந்தனைக்கு நமது பண்பாட்டுப் புலத்தில் ஒரு மொழிக் கட்டமைப்பு, வடிவத்தை இவ்வாறு கண்டடைய முடியாது. அதற்கு ஒரு காரணம் தமிழில் அராஜகவாத சிந்தனைக்கு கலாச்சார ரீதியான ஒரு கராறான மரபு தோன்றவில்லை என்பது.
குறிப்பாக அரசியல் சமூக சிந்தனை சார்ந்து, சாதிய சனாதன எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு எனும் பொருளில் அப்படி ஒரு அலை தமிழ் அரசியலில் எழுந்தது போல பண்பாட்டளவில் தோன்றவில்லை. ஆனால் மேற்கில் இருபதாம் நூற்றாண்டில் ஹிப்பி கலாசாரம், எதிர்க்கலாச்சாரம், பௌத்தம், இயற்கைக்குத் திரும்புதல் எனும் கோணத்தில் அராஜகவாதம் ஒரு பண்பாட்டு வடிவமாக உருக்கொண்டது. அமெரிக்க புனைவெழுத்தின் ஆதார விதையென்று கருதப்படுகிற மார்க் ட்டெவியினின் The Adventures of Tom Sawyer, ஜேக் கெரவக்கின் On the Road, வொனெகட்டின் Slaughter House Five, ராபர்ட் ஹெயின்லெயினின் Stranger in a Strange Land, கென் கெஸியின் One Flew Over the Cuckoo’s Nest, ஜெ.டி சாலிங்கரின் Catcher in the Rye, புக்காவஸ்கியின் அனேகமாக எல்லா நாவல்கள், கதைகள், கவிதைகளும், ஜெனெயின் Our Lady of the Flowers, பாலின் ரெகெயின் The Story of O, சிக்ஸுவின் Angst போன்ற நாவல்கள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை நாம் இந்த அராஜகவாத இலக்கிய மரபின் முக்கிய படைப்புகள் என்று கூறலாம்.
இந்த எதிர்க்கலாச்சார, அராஜகவாத மரபின் சாயலை நாம் தமிழில் ஜி.நாகராஜன் கதைகளில், ஆரம்ப கால லஷ்மி மணிவண்ணனின் கவிதைகள், கதைகளில், இன்றைய லஷ்மி சரவணகுமாரின் படைப்புகளில், சாரு நிவேதிதாவின் “எக்ஸிஸ்டென்ஷியலிடமும் பேன்ஸி பனியனும்” உள்ளிட்ட பல படைப்புகளில், சாருவை ஒட்டிய எழுத வந்தவர்களின் பிரதிகளில் காண்கிறோம். இந்த படைப்புகளில் பெரியாரின் சமூக அரசியல் இயக்கத்தின் ஒரு பண்பாட்டு முகம் வெளிப்படுகிறது என்று நான் தயங்காமல் கூறுவேன். ஒரே வித்தியாசம் மேற்கில் நிகழ்ந்தது போல சமூக அரசியல் வெளியில் அதிகார மையத்தை, மதத்தில், சாதியத்தில் நிலவும் மேலாதிக்கத்தை நேரடியாக எதிர்க்கிற படைப்புகளை எழுத நாம் பெரிதாக முயலவில்லை. துரதிஷ்டவசமாக, அதைச் செய்கிற முன்னோடிகள் இங்கு தோன்றவில்லை. மேற்கில் இருந்தும் அராஜகவத, அரசின்மைவாத படைப்புகளை இங்கு நாம் போதுமானபடிக்கு மொழியாக்கிக் கொண்டுவரவும் இல்லை.
இன்னொரு விசயம் பெரியாரிய சிந்தனை, அராஜகவாதம் ஆகியவை ஒருவித நகரமயமாக்கட்ட சூழலில் தோன்ற சாத்தியமுள்ள கருத்தமைவுகள். நான் மேலே குறிப்பிட்டுள்ள மேற்கத்திய எதிர்க்கலாச்சார தமிழ் படைப்பாளிகள் அவ்வாறு நகரமயமான, நவீனமான ஒரு வாழ்வுநிலையில் இருந்து உலகைப் பார்க்கிறவர்களாக அல்லது கிராமிய வாழ்க்கையை ஒரு நகரமய ஒழுங்கு எதிர்ப்பு பார்வையுடன் அணுகுகிறவர்களாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். தமிழிலும் அவ்வாறே எதிர்க்கலாச்சாரவாதிகள் இருக்கிறார்கள். கவிதையில் பெருந்தேவி ஒரு சிறந்த உதாரணம். புனைவில், ஏற்கனவே குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர, கிராமத்து வாழ்வின் உதிரிகளைச் சித்தரித்த கண்மணி குணசேகரன், ஓரளவுக்கு கி.ரா ஆகியோரிடமும் இந்த நவீனப் போக்கை பார்க்கிறோம். ஆனால் நமது பெரும்பகுதியான நவீன இலக்கியம் - கவிதைகளையும் உள்ளடக்கி - கிராமிய தன்மை கொண்டதே. கிராமியத்தை நேசித்தவர்கள் என்றால் என்றால் மனதளவில் சாதியத்தையும், மதசச்சடங்குகளை உள்ளூர நேசிக்கிற ஒரு மனப்பான்மையை அவர்கள் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.
நமது நாவல்களில் மூன்று நான்கு தலைமுறைக் கதைகளைக் கூறும் நவீன, சமகால நாவல்களைப் பாருங்கள். அவை அப்பட்டமாக சாதீய பெருமிதத்தை கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தினர் ஒரு நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்குள்ள பிற மக்களுடனும் இயற்கையுடனும் நோய்நொடிகள், பொருளாதார சிக்கல்களுடன் போராடி வென்றதைப் பேசும் படைப்புகளாக அவை இருக்கின்றன. (தலித்திய நாவல்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.)
ஆக இயல்பாகவே அவர்கள் பெரியாரிய தன்மை கொண்ட அராஜகவாத மரபை விட, காந்திய தன்மை கொண்ட கிராமிய படைப்புகளையே தமது முன்னோடி இலக்கியமாகக் கண்டார்கள். ஜெயமோகன் மற்றொரு எல்லைக்கு சென்ற பாரதீய இலக்கியம் ஒன்றை கற்பனை செய்து பார்க்க முயன்றதுடன், நவீன, பின்நவீன இலக்கியத்தை மறுத்து நவ-செவ்வியல் (neo-classical) மரபொன்றை உருவாக்க இங்கு உருவாக்க முயல்கிறார்.
இப்படி தமிழில் அதிகம் பேசப்பட்ட இலக்கிய மரபில் பெரியாரிய அராஜகவாத படைப்புகள் முன்னோடிகளாகத் தோன்ற முடியவில்லை. காந்தியை நம் சிறுபத்திரிகை ஆட்கள் வீட்டுக்குள் அழைத்து பாதபூஜை செய்து விட்டு பெரியாரை வாசலுக்கு வெளியிலே நிறுத்திக் கொண்டனர். மற்றபடி காந்தியின் சிந்தனைகள் எந்த விதத்திலும் பெரியாரியத்தை விட இலக்கியத்துக்கு கூடுதல் அனுசரணையானவை அல்ல. காந்திக்கு இலக்கியத்திலோ தத்துவத்திலோ அடிப்படை புரிதல் கூட இல்லை, அவர் எந்தளவுக்கு ‘மரமண்டை’ என்பதற்கு அவர் பகவத் கீதைக்கு எழுதிய உரை ஒரு சிறந்த உதாரணம். அவருடைய எழுத்துக்களுக்கு பெரியாரின் எழுத்துக்கள் நிச்சயம் மேலானவை, எல்லாவிதமான மேலாதிக்கத்தையும் எதிர்ப்பவை, எல்லா கருத்தமைவுகளையும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து மாற்றுப்பார்வையை முன்வைப்பவை.
கருத்துகள்